யுத்தக் குற்ற விசாரணைக்கு கலப்பு நீதிமன்றம்? : சிறப்பு குழுவின் அறிக்கை அரசிடம்
மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்கான, கலப்பு நீதிமன்ற பொறிமுறை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட, சட்டநிபுணர்கள் குழுவின் அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது, இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், சட்டத்தரணிகள், நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கு, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
கடந்த 2015 ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவைக்கூட்டத் தொடரின்போது, அமெரிக்க தலைமையிலான நாடுகள் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியதுடன், பிரேரணையானது ஐ.நா மனித உரிமை பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொறுப்புக்கூறும் நடவடிக்கைக்கான கலப்பு நீதிமன்ற பொறிமுறை குறித்து ஆராய்வதற்கென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் குழுவொன்றை நியமித்ததுடன், குறித்த குழுவினரின் அறிக்கையே அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
46 பக்கங்களைக் கொண்ட அறிக்கையினைத் தயாரித்துள்ள இந்த சட்டநிபுணர்கள் குழுவில், சுரேன் பெர்னாண்டோ, ஒஸ்ரின் பெர்னாண்டோ, பிரசாந்தினி மஹிந்த ரட்ண, ராம் மாணிக்கலிங்கம், உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் அங்கம் வகித்தனர்.
இந்த குழுவின் அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள போதிலும், கலப்பு நீதிமன்றம் அமைப்பது குறித்த அவர்கள் எவ்வாறான பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்கள் என்ற தகவல்கள் வெளியாகவில்லை என்றும் அந்த ஊடகச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
News from :- athavan news





0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>