முஸ்லிம்களின் பணத்தை வாரி இறைக்கும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் தரம்?
-------------------------------------------------
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் நீண்ட காலமாக முஸ்லிம் நிகழ்ச்சியை நடாத்தி வருகிறது. முஸ்லிங்கள் செறிந்து வாழாத பகுதியிலே இருக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்கு இது பெரும் வரப்பிரசாதமாகும்.
முஸ்லிம் சேவைபற்றி நாம் ஆதங்கப்படும் சில விடயங்களை உங்களோடு பகிர்கிறேன். இதில் தனிப்பட்ட விடயங்கள் எதுவும் இல்லை என்பதை அறிக. இவர்கள் எப்போது அறிவுபூர்வ நிகழ்ச்சிகளைத் தருவது. என்ற ஏக்கத்துடன் பகிர்கிறேன்.
முன்னொரு காலத்தில் சிறப்பாக நடைபெற்ற முஸ்லிம் சேவை இன்று முஸ்லிம் சேவையா? விளம்பர சேவையா என்று சந்தேகிக்கப்படும் அளவு சீரழிந்து விட்டது. இரண்டு அறிவுபூர்வமான நிழ்ச்சிகளுக்கிடையில் பல நூறு விளம்பரங்கள் வந்து காதுகளை அடைக்கச் செய்கின்றன. விளம்பரங்களும் வேண்டும் அது எல்லை மீறக் கூடாதே. இங்கே முழு ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் ஊழியர்களுக்குமான சம்பளத்தையும் முஸ்லிம் சேவைதான் உழைக்க வேண்டுமா என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவு விளம்பர மயம்.
ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் அதிகமானவை மறு ஒலிபரப்பாகவே உள்ளது. காலம் பல மாற்றங்களைக் கண்டுவரும் இன்றைய நவீன யுகத்தை இத் தயாரிப்பாளர்கள் இன்றும் புராதன யுகத்துக்கு அழைத்துச் செல்வதன் மர்மம் ஏனோ. "மஸ்ஹுத் ஆலிம்" அவர்களின் நிழ்ச்சிகள் பழைமையானாலும் சிறப்பானதே. வெறும் உப்புச் சப்பில்லாத பழைய நிகழ்ச்சிகள் ஏன் என்பதே ஆதங்கம். ஏன் உங்களால் புதிய நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முடியாதா? இலகுவில் மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறீரா? அல்லது பணம் உழைப்பதே உமது எண்ணமா? அல்லது புதிய நிகழ்ச்சிகளைத் தயாரிக்க நிதிப் பற்றாக் குறையா? ஒரு குவியல் விளம்பரங்களை மூட்டை கட்டி வைத்து என்ன செய்கிறீர்கள்.
சம்பந்தப்பட்ட சகோதரர்களே! உங்கள் மனச் சாட்சிகளைக் கேளுங்கள் இந்த ரமழானிலாவது நாம் செய்வது சரியா என்று.
முஸ்லிம் நிகழ்ச்சிக்கான இந்த ரமழானுக்கு மட்டுமான விளம்பர வருவாய் நான்கு கோடி (40000000/=) எனின் நம்ப முடிகிறதா? நிந்தவூரைச் சேந்ர்த ஒரு சதோதரரால் மட்டும் அறுபது இலட்சத்துக்கான விளம்பரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இது ரமழானுக்கு மட்டுமானது. அந்த சகோதரரின் விளம்பரத்துக்கான தரகுப் பணம் மட்டும் ஒன்பது இலட்சம் (900000/-). இந்தப் பணம் எல்லாமே முஸ்லிம் கடைகளிலிருந்தே அறவிடப்பட்டுள்ளது. உழைப்பதில் எமக்கு ஆட்சேபனை கிடையாது. நிகழ்ச்சிகளைத் தரும் போது ஏன் மக்கள் மனதை வெல்ல முடியாதிருக்கிறது என்பதே கவலை.
அன்றொரு ஒருநாள் இப்தாருக்கான நேரத்தில் "பாராளுமன்றத்தில் இன்று" போகிறது. இது ஏன்? எமது பணத்தைச் சுருட்டும் தயாரிப்பாளருக்கு இது புரியாதா? அல்லது பாரபட்சமா?
தரமான எந்த நிகழ்ச்சிகளும் இல்லை. உரியவர் தனக்கு பிடித்த ஒருவரை அழைத்து வந்து பேட்டி எடுப்பது. தனது நண்பர் ஒருவர் ஏதாவது புத்தகம் எழுதினால் அதைப்பற்றி நிகழ்ச்சி நடாத்துவது.
என்ன இது? அமானிதம் அல்லவா? எமக்கு இந்த நாட்டிலே இருக்கும் ஒரே ஒலி ஊடகமல்லவா? அதை ஏன் நாம் சரியாகப் பயன்படுத்த முடிவதில்லை. ஏன் பணம் பணம் என்று மட்டுமே எமது சமூகம் ஓடுகிறது? சகோதர தமிழ், சிங்கள தயாரிப்புக்களையாவது நீங்கள் பார்க்க வில்லையா?
உங்கள் காதுகளை அடைத்து வைத்துவிட்டா தயாரிப்பாளர்களே எங்கள் காதுகளை வருத்துகிறீர்.
நாங்கள் முஸ்லிம் நிகழ்ச்சியைக் கேட்பதனூடாக ஹதீசும், குர்ஆன் வசனமும் கேட்டு வருகிறோம் என்று நினைத்திருக்கிறீரா தயாரிப்பாளரே! வெறும் விளம்பரச் சத்தம் எம்மைக் குடைந்துகொண்டிருப்பதை நீர் அறிவீரா?
ஐவேளைத் தொழுகைக்கு அனுசரணை
சஹர் விஷேட நிகழ்ச்சிக்கு அனுசரணை
இப்தார் விஷேட நிகழ்ச்சிக்கு அனுசரணை
மாதர் மஜ்லிஸ், வேறு எல்லா நிகழ்ச்சிகளுக்குமே அனுசரணை
எனின் slbc ஏன் இதை நடாத்த வேண்டும். பட்டி தொட்டி எங்கும் ஏழை, பணக்காரன் என எல்லோர் வீட்டிலும் கேட்கும் வானொலியை ஏன் இவர்கள் பணம் உழைக்கும் மெசினாக்கினர். மக்களுக்கு சியாமுத்தீன் போன்றவர்களின் குரலை இப்போது விளம்பரத்தில் மட்னுமே கேட்க முடிகிறது. ஏன் மக்களை விளம்பரங்களால் செவிடர்களாக்கும் எண்ணமா உங்களுக்கு? சிந்தியுங்கள்.
முஸ்லிம் சேவைக்கு நல்ல தயாரிப்பாளர் இல்லையாம். அப்போது நல்ல விளம்பரதாரர்களை மட்டும் நியமித்து முஸ்லிம்களின் பணத்தைச் சுருட்டிக் கொடுக்க முடிகிறதா?
பொறுப்புதாரிகளே சிந்தியுங்கள். எமக்கான இந்த ஒலி ஊடகத்தைச் சரியாக வழி நடாத்துங்கள். ஏனோதானோ மனப்பாங்கை விடுத்து சிறந்த நிகழ்ச்சிகளைத் தாருங்கள். சமூக சீர்திருத்தம் உங்கள் சேவையின் கையில் என்பதை நம்புங்கள்.
எப்போது இந்த எடுப்பார் கைப்பிள்ளை மனோ நிலை மாறும் என்ற ஏக்கத்துடன்.
ஏ.எல். நௌபீர்





0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>